WhatsApp Channel
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு அயோத்திக்கு கூடுதல் ரயில்களை இயக்க டெல்லி அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. ராமர் சிலை பிரதிஷ்டைக்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த 15ம் தேதி நிறைவடைந்தது. அதன்பின், சிலை பிரதிஷ்டை பூஜை ஜனவரி 16ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். ஆனால், இந்த விழாவில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிலை கும்பாபிஷேக விழாவிற்கு பிறகு அயோத்திக்கு கூடுதல் ரயில்களை இயக்க டெல்லி அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இறுதியாக தங்களிடம் இருந்து அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றார். ஆனால் விழாவில் கலந்து கொள்ள எங்களுக்கு அழைப்பு வரவில்லை.
முந்தைய கடிதத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், விஐபிக்கள் இருப்பதால் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் எனது குடும்பத்துடன் அயோத்திக்கு வர விரும்புகிறேன். எனது பெற்றோர் ராமர் கோயிலுக்குச் செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதனால் ஜனவரி 22ம் தேதிக்குப் பிறகு வேறொரு நாளில் கோயிலுக்குப் போவோம்.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், விழாவில் பங்கேற்க தனக்கு அழைப்பு வரவில்லை என்று கூறினார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை விழாவுக்கான தேதிகளை ஒதுக்குமாறு கெஜ்ரிவாலுக்கு கடிதம் வந்தது. ஆனால் அதன் பிறகு முறையான அழைப்பு வரவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Discussion about this post