WhatsApp Channel
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வால் பக்தர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“அயோத்தி, உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு உற்சாகம் பரவியுள்ளது.பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியால் பக்தர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதுவரை அனைத்து ஏற்பாடுகளும் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. அதேபோல், வரும் 22ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவும் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். பொதுமக்களின் ஒத்துழைப்பும், துறவிகளின் ஆசியும், ராமர் அருளும் கிடைத்தால், விழா சிறப்பாக நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை உள்ளாட்சி நிர்வாகமும், மாநில அரசும் இணைந்து செய்து வருகிறது. அயோத்திக்கு வரும் பக்தர்களுக்காக கூடார நகரங்கள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. பக்தர்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
5 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், பக்தர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியும், உற்சாகமும் அலைமோதியது. அதே உற்சாகம் நம் இதயத்திலும் இருக்கிறது. அனைவருக்கும் சிறந்த தரிசனம் கிடைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். அயோத்திக்கு வரும் யாரும் எந்த ஒரு கஷ்டத்தையும் அனுபவிக்கக்கூடாது.
உள்ளூர் பக்தர்களுக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கான பயணத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
Discussion about this post