WhatsApp Channel
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு சிறையில் உள்ள கைதிகளை தீவிரவாதிகளாக மாற்ற தூண்டப்பட்ட வழக்கு மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்குகள் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் ஏழு மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதத் திட்டம் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய சந்தேக நபர்களின் இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
இதற்கிடையில், தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் பெங்களூரு சிறையில் உள்ள கைதிகளை பயங்கரவாதிகளாக மாற்ற தூண்டியது தொடர்பாக ஆயுள் தண்டனை கைதி உட்பட 8 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த ஜனவரி 12ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி நசீர் 2013-ம் ஆண்டு முதல் பெங்களூரு மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அதே நேரத்தில் ஜே.டி என்ற ஜுனைத் அகமது மற்றும் சல்மான் கான் ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
மற்றவர்கள் சையத் சுஹைல் கான், முகமது உமர், ஜாஹித், சையத் முடாசிர் பாஷா மற்றும் முகமது பைசல் ரப்பானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 8 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், வெடிபொருள் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Discussion about this post