WhatsApp Channel
மறைந்த கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பத்மஜா வேணுகோபால் பாரதிய ஜனதா கட்சியில் சேரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பத்மஜா வேணுகோபால் காங்கிரஸில் இருந்து விலகக்கூடும் என்று பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருச்சூரில் இருந்து பத்மஜா தோல்வியடைந்தார். அதன்பிறகு இது போன்ற தகவல் பரவி வருகிறது. இப்போது அது வேகம் பெற்றுள்ளது. ஒருவகையில் நம்மூர் விஜயதாரணியைப் போலவே பத்மஜா என்ற பெயரும் அங்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. விஜயதாரணி பாஜகவுக்குப் போவதாகச் செய்திகள் வந்த நிலையில், அது கடைசியில் நடந்தது.
பத்மஜா வேணுகோபால் காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்தவர். அதன் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார். ஆனால், மாநில தலைமையுடனான அவரது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தன்னை மோசமாக நடத்தியதாக பகிரங்கமாக விமர்சித்துள்ளார். விஜயதரணி போல் காங்கிரஸில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று கூறியுள்ளார்.
வேண்டுமென்றே பெண் வேட்பாளர்களை தோற்கடிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
இருப்பினும் விஜயதரணி போல் கட்சி தாவப்போவதில்லை என கூறி வருகிறார். தன்னை நெருப்பு என்றும், பாஜகவை நெருங்க முடியாது என்றும் கூறியவர் விஜயதரணி. இதே பாணியில், காங்கிரஸில் இருந்து விலகுவது குறித்த கேள்விக்கு, ‘இன்று சரியாக பேச முடியாது, நாளை பற்றி எப்படி பேசுவது’ என, நகைச்சுவையாக பதிலளித்தார் பத்மஜா.
அதனால் கேரளக் கடற்கரையில் ஒரு விஜயதாரணி உதயமாகிறது!
Discussion about this post