WhatsApp Channel
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்க உள்ளது.
லோக்சபாவின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது.அதேபோல் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளின் பதவிக்காலமும் ஜூன் மாதம் முடிவடைகிறது.
எனவே, வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் அட்டவணை தொடர்பான அறிவிப்பு நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் கூட்டாக தேர்தல் தேதியை அறிவிக்கின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்.
முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணை மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் ஏப்ரல் 11ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்கி ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23ஆம் தேதி எண்ணப்பட்டன.
2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களிலும், காங்கிரஸ் 52 இடங்களிலும் வெற்றி பெற்றன. மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு போதிய எண்ணிக்கை கிடைக்கவில்லை.
இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு வாழ்வா சாவா போராட்டமாக பார்க்கப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் சுமார் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post