WhatsApp Channel
சத்தீஸ்கரில் சுரங்கப் பகுதிக்கு வந்த சில நக்சலைட்டுகள் டிரைவர்களை கீழே இறக்கி விட்டு 4 லாரிகளுக்கு தீ வைத்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அடர்ந்த வனப் பகுதிகளில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் உள்ளது. காட்டுக்குள் ஒளிந்துகொண்டு பயிற்சி பெற்ற இவர்கள், அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து, கிராமத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்கின்றனர்.
அவர்கள் தங்களை சமூக நலனுக்கான போராளிகளாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள், மேலும் பொதுவாக கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுகள் மற்றும் கண்ணிவெடிகளை வைப்பது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். போலீசில் புகார் செய்பவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தெருக்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, தப்பியோடுவதற்கு முன் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில், சுரங்கத்தில் இருந்து இரும்பு தாது எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு நக்சலைட்டுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுரங்கத்தில் இருந்து இரும்பு தாது ஏற்றிய 4 லாரிகள் புறப்பட தயாராக இருந்தன. அப்போது, அப்பகுதிக்கு வந்த நக்சலைட்கள் சிலர், டிரைவர்களை கீழே இறக்கி விட்டு, 4 லாரிகளுக்கு தீ வைத்தனர். எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு சென்றபோது லாரிகள் முற்றிலும் எரிந்து நாசமானது. நாராயண்பூர் மாவட்டம் பஸ்தர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இத்தொகுதியில் வரும் 19ம் தேதி முதல் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Discussion about this post