WhatsApp Channel
கெஜ்ரிவால் சிறையில் மாம்பழம் மற்றும் இனிப்புகளை அடிக்கடி சாப்பிடுவார் என்று அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி மதுக்கொள்கை விதிமீறலில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கடந்த மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. அமலாக்க இயக்குனரகத்தால் தொடர்ந்து 10 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்ட கெஜ்ரிவால், தற்போது நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கெஜ்ரிவால் தனது ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்கவும், மருத்துவரை அணுகவும் அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கெஜ்ரிவாலின் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லை என்றும், வழக்கமான மருத்துவரை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் தரப்பில் வாதிடுகையில், “சர்க்கரை நோய் இருப்பதாகக் கூறிய கெஜ்ரிவால், மாம்பழம், சர்க்கரை கலந்த டீ, இனிப்புகளை அடிக்கடி சாப்பிடுவார். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர்குலைத்து ஜாமீன் பெற கெஜ்ரிவால் வேண்டுமென்றே இதைச் செய்கிறார்” என்று வாதிட்டார்.
இதையடுத்து, கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊடக விளம்பரத்திற்காக அமலாக்கத்துறை இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டினார். மேலும் கெஜ்ரிவால் தரப்பு மனுவை வாபஸ் பெற்று மற்றொரு மனுவை தாக்கல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிமன்றம், கெஜ்ரிவாலின் உணவு முறை குறித்த மருத்துவ அறிக்கையை பெற்று சமர்ப்பிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது.
Discussion about this post