WhatsApp Channel
தமிழகத்தில் ஓலா மற்றும் உபேர் டாக்சி ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சேவைக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஓலா மற்றும் ஊபர் ஆப் மூலம் கார், ஆட்டோக்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பேருந்து, ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்திற்குச் செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு கார் அல்லது ஆட்டோவை இந்த செயலியைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம், இதனால் வாகனங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வரும்போது பொதுமக்கள் எளிதாகப் பயணம் செய்யலாம்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் மருத்துவமனை உள்ளிட்ட அவசர பயணங்களுக்கான முன்பதிவு குறித்த நேரத்தில் மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில் வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும். இருசக்கர வாகனத்தை தடை செய்ய வேண்டும். மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓலா மற்றும் உபேர் ஓட்டுநர்கள் நேற்று முதல் 3 நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். ஓலா மற்றும் உபேர் ஓட்டுநர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்நிலையில், ஓலா மற்றும் உபேர் ஓட்டுநர்களின் போராட்டத்தால் சேவைக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 120 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறைவான ஓட்டுனர்களே டாக்சி சேவை வழங்குவதால், கட்டணம் உயர்ந்துள்ளது.
Discussion about this post