WhatsApp Channel
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோயில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில் திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேலசாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து குத்து விளக்கு ஏற்றி தீபாராதனை காட்டுகிறார்.
நாளை (18ம் தேதி) காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அட்டஜ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. 22ம் தேதி பூஜை முடிந்து அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.
ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு கேரள அரசின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். முன்பதிவு நடந்து வருகிறது. நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் இன்று முதல் செயல்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Discussion about this post