WhatsApp Channel
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த மணியன் (வயது 55), வேல்முருகன் (27), சத்யராஜ் (30), அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கோடிலிங்கம் (53). இவர்கள் 4 பேரும் மீனவர்கள். நேற்று மாலை அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்றனர்.
கோடியக்கரை தென்கிழக்கு கடலில் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களின் படகை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது படகில் ஏறிய மீனவர்கள், கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை தருமாறு கூறினர்.
அப்போது மீனவர்களை கத்தியால் குத்தி, சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை கொள்ளையடித்து தப்பினர். இலங்கை கடற்கொள்ளையர்களின் இந்த கொடூர தாக்குதலில் மணியன், கோடிலிங்கம், வேல்முருகன், சத்யராஜ் ஆகிய 4 மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அதன்பின், காயங்களுடன் மீண்டும் கரைக்கு ஓடிய அவர்கள், நடந்த விவரங்களை உறவினர்களிடம் கூறினர். அதன்பின், 4 பேரும் ஆம்புலன்சில் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மீன் வளர்ச்சி சங்க தலைவர் கவுதமன், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தொடரும் இந்த அட்டூழியத்தால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post