WhatsApp Channel
கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இந்த பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் இந்த சம்பவத்தை அரங்கேற்றியது. கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து கேரளாவை சேர்ந்த சயன், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டு 49 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்வதற்காக குஜராத் தடயவியல் பல்கலைக்கழக நிபுணர்கள் குழு வரும் 26ம் தேதி தமிழகம் வருகிறது. 19 டவர்களில் பதிவான 60 செல்போன் எண்களின் உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். செல்போன்களை ஆய்வு செய்து 8,000 பக்க அறிக்கை கடந்த வாரம் சிபிசிஐடியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. செல்போன் உரையாடல் விவரம் அளிக்கப்பட்டுள்ளதால் வரும் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Discussion about this post