WhatsApp Channel
லால்குடி நகரில் என் மண் என் மக்கள் பயணம், சப்தரிஷிகள் வந்து ஈஸ்வரனை வழிபட்ட சப்தரிஷீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் லால்குடி நகரில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்புடன் வெகுசிறப்பாக நடந்தேறியது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கல்லக்குடி பேரூராட்சி தலைவராக உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர் பால்துரை, கல்லக்குடி திமுக நகர செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இவர், டால்மியா சிமெண்ட் ஆலையில் வேலை வாங்கித் தருவதாக, பலரிடம் பணம் வாங்கிவிட்டு, அவர்களுக்கு வேலை வேண்டுமென டால்மியா சிமெண்ட் ஆலை நிர்வாகத்தை நிர்ப்பந்தித்துள்ளார். மாமூல் கேட்டும், சிமெண்ட் ஆலை மூலம் நிறைவேற்றப்படும் பணிகளை, தங்களுக்குத் தர வேண்டும் என்றும், நிறுவனத்தின் உள்ளே அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியிருக்கிறார்கள். டீக்கடை, பஜ்ஜி கடை, பிரியாணி கடை, பியூட்டி பார்லர் என இருந்த திமுகவினர், தற்போது, மிகப்பெரிய சிமெண்ட் ஆலை நிறுவனத்தை மிரட்டும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது.
கல்லக்குடி கொண்ட கருணாநிதி என்று, கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சாதனை என்று திமுகவினர் பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், கல்லக்குடி போராட்டத்தில் நடந்த உண்மை வேறு. டால்மியாபுரம் ரயில் நிலையம் எனும் பெயர்ப் பலகையின் மீது, கல்லக்குடி ரயில் நிலையம் என்ற போஸ்டரை ஒட்டுவதுதான் அன்றைய திமுக தலைவர் அண்ணா அவர்களின் போராட்ட அறிவிப்பு. கருணாநிதி தலைமையில் சென்ற போராட்டக் குழுவினரை காவல்துறையினர் கண்டுகொள்ளாததால், அவர்கள் கவன ஈர்ப்புக்காக, ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கைதானார்.
அதன் பின்னர் வந்த கவிஞர் கண்ணதாசன் தலைமையிலான குழு காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, தலையிலும் உடல் முழுவதும் ரத்த காயத்துடன் கைது செய்யப்பட்டனர். வழக்கின் முடிவில், கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். ஆனால், கருணாநிதி, மூன்று மாதத்திலேயே விடுதலை ஆகியிருந்தார்.
கல்லக்குடி போராட்டத்தில், ரத்தம் சிந்தி, உயிருக்கு போராடி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கண்ணதாசன் பெயர் மறைக்கப்பட்டு, சத்தமில்லாமல் காவல்துறை வாகனத்தில் ஏறிச் சென்ற கருணாநிதியை, ‘கல்லக்குடி நாயகன்’ என்று அழைப்பது, மோசடித்தனம். கல்லக்குடி கண்ட கண்ணதாசன் வாழ்க என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, திருச்சி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 4591 கோடி ரூபாய் நிதி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் லால்குடி இரயில்வே நிலையத்தை மேம்படுத்த 6.27 கோடி ரூபாய் நிதி, 45,376 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 3,94,338 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,02,252 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,35,861 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 97,097 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,47,248 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 8,018 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என பல லட்சம் மக்கள் பயனடையும்படி, திருச்சி மாவட்டத்தில் நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
ஆனால் திமுக அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அமைச்சர்கள் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார்கள். நாட்டிலேயே லஞ்ச ஊழல் அதிகமாக இருக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. திமுக ஆட்சியில், லால்குடி செங்கரையூர் கிராமத்தில், ரூ.23.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூழையாறு வாய்க்காலும், இருதயபுரம் கிராமத்தில், ரூ.1.94 கோடி செலவில் கட்டப்பட்ட நந்தியாறு வடிகாலும் ஒரு மிதமான மழைக்கே சேதமடைந்துள்ளன. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கமிஷன் வாங்கிவிட்டு, எஞ்சியிருக்கும் நிதியில் நடக்கும் பணிகள் எப்படி தரமானவையாக இருக்கும்?
விவசாய நிலத்தில் சிவப்புக் கம்பளம், சிமெண்ட் சாலைகள் அமைத்தது என்றெல்லாம் பொருத்தமற்ற செயல்களைச் செய்துவிட்டு, தன்னைத் தானே டெல்டாக்காரன் என்று அழைத்துக்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
முழுக்க முழுக்க மக்கள் விரோத அரசாகவே திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்து முப்பது மாதங்கள் கடந்தும், எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. மது விற்பனைக்கு உச்சவரம்பு நிர்ணயித்து, திமுகவினர் நடத்தும் டாஸ்மாக் ஆலைகளுக்கு வருமானம் வருவதற்காக, ஏழை எளிய மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, மூன்றில் இரண்டு பங்கு டாஸ்மாக் கடைகள் நிச்சயமாக மூடப்படும்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத தீயசக்தி திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த, பிரதமரின் நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
Discussion about this post