WhatsApp Channel
கடந்த 19ம் தேதி கோலாகலமாக தொடங்கிய கேலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவடைகிறது.
டென்னிஸில் இரட்டை தங்கம்
6வது கேலோ இந்தியா யூத் கேம்ஸ் (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் நடக்கிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு விழாவின் 12வது நாளான நேற்று தமிழகம் மேலும் 6 தங்கப் பதக்கங்களை வென்றது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆடவர் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் பிரணவ்-மகாலிங்கம் ஜோடி 6-3, 6-1 என்ற செட் கணக்கில் மராட்டியத்தின் தனிஷ்க் முகேஷ் யாதவ்-காஹிர் சமீர் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை ருசித்தது. பெண்கள் இரட்டையர் பிரிவிலும் தமிழகம் வென்றது. இதில் ரேவதி-லட்சுமி பிரபா இணை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் கர்நாடகாவின் சுஹிதா-ஸ்ரீநிதி ஜோடியை வீழ்த்தியது.
பெண்களுக்கான 81 கிலோ பளு தூக்குதல் பிரிவில் தமிழகத்தின் ஆர்.பி. கீர்த்தனா 85 கிலோ, க்ளீன் அண்ட் ஜெர்க் 103 கிலோ, மொத்தம் 188 கிலோ எடை தூக்கி தேசிய சாதனை படைத்தார். மற்றொரு தமிழக வீராங்கனை ஓவியா 184 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் வினயகிராம்-ஸ்வஸ்திக் ஜோடி 21-18, 21-18 என்ற நேர் செட்களில் டெல்லியின் பவ்யா சப்ரா-பரம் சவுத்ரி ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. ஒற்றையர் பிரிவில் லக்ஸ் செங்கப்பா (கர்நாடகா), அன்ஷ் நேகி (உத்தரகாண்ட்), மிதேஷ் (தமிழ்நாடு) முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
நீச்சலில் ஸ்ரீநிதிக்கு 4வது பதக்கம்
வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நடந்த ஆடவருக்கான 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் சென்னையின் நிதிக் நாதெல்லா 2 நிமிடம் 04.50 வினாடிகளில் பந்தய தூரம் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். 12-ம் வகுப்பு படிக்கும் நித்திக், நடந்து வரும் தொடரில் குவித்த 4-வது பதக்கம் இதுவாகும்.
பெண்களுக்கான 200 மீ., மெட்லே பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஸ்ரீநிதி நடேசன் 2 நிமிடம் 26.78 வினாடிகளில் நீந்தி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ள ஸ்ரீநிதிக்கு இது 4வது பதக்கம். சேலத்தை சேர்ந்த ஸ்ரீநிதி 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே சமயம் வில்வித்தையில் தமிழகம் ஏமாற்றம் அடைந்தது. இதில் மராத்தி, பஞ்சாப், அரியானா வீரர், வீராங்கனைகள் வெற்றிக் கொடியேற்றினர். நேற்றைய முடிவில் நடப்பு சாம்பியனான மராத்தி 53 தங்கம் உட்பட 149 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழக அணி 35 தங்கம், 20 வெள்ளி, 36 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.
இன்று நிறைவு பெற்றது
கடந்த 19ம் தேதி கோலாகலமாக தொடங்கிய காலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளில் கால்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் ஆகிய 4 விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.
நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடக்கிறது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
Discussion about this post