WhatsApp Channel
திருச்சியில் பைக்கில் பட்டாசு வெடிக்கும் இளைஞர்கள் – ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
தமிழகத்தில் ஆங்காங்கே இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையின் போது இளைஞர் ஒருவர் தனது பைக்கில் பட்டாசு வெடித்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ டெவில் ரைடர்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் இது எங்கிருந்து எடுக்கப்பட்டது எனத் தெரியாத நிலையில், போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வீடியோவை பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் திருச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை உறுதி செய்தது. தொடர்ந்து திருச்சி போலீசார் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த மணிகண்டன் பைக் சாகசத்தில் ஈடுபட்டதும், இந்த சாகசத்தை வீடியோ எடுத்தது திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரை சேர்ந்த அஜய் (வயது 24) என்பதும் தெரியவந்தது. அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., வருண்குமார் உத்தரவின் பேரில், இருசக்கர வாகன ஓட்டிகள் மணிகண்டன், அவரது நண்பர் அஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சியைச் சேர்ந்த அஜய் என்பவர் கைது செய்யப்பட்டார். போலீசார் மணிகண்டனை தேடி வருகின்றனர். மேலும் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் பைக்கில் வீலிங் செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பைக் வீலிங் செய்து சிக்கிய 13 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான வகையில் பைக் வீலிங் செய்பவர்கள் குறித்து 94874 64651 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
Discussion about this post