WhatsApp Channel
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுர வாயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் கோவில் முன்பு சத்தம் போட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் செவ்வாய்கிழமை அன்று கபாலீஸ்வரர் ராஜகோபுர பிரதான வாசலில் குடிபோதையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி சில பொருட்களை தீ வைத்து எரித்தார். எனினும், அதிர்ஷ்டவசமாக கோவிலின் கதவு சேதமடையவில்லை.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த ஏராளமான பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், மர்ம நபரை கைது செய்ய வலியுறுத்தினர்.
இதுகுறித்து, கோயில் நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் நடந்த போது, கோவில் காவலர்கள் யாரும் இல்லை என்பதும், கோவில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், கோயில் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கபாலீஸ்வரர் கோவில் வாசலுக்கு தீ வைத்ததாக அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த தீனதயாளனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post