WhatsApp Channel
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போர் 100 நாட்களைக் கடந்துள்ளது. தாக்குதல்கள் தொடர்வதால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அக்டோபர் 7ம் தேதி காஸாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி சுமார் 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்தது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஒரு முழு அளவிலான போரை ஆரம்பித்து காசாவை அழித்து வருகிறது. காஸாவில் இதுவரை 24,000 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள்.
இதேபோல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1200 பேர் கொல்லப்பட்டனர். பிடிபட்ட பணயக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் வசம் உள்ளனர்.
ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் எல்லையில் இருந்து ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் இஸ்ரேலியப் படைகள் தாக்கப்படுகின்றன. இந்த தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் 100வது நாளைத் தாண்டியுள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனிடையே காசாவின் தெற்குப் பகுதியை முழுமையாகக் கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, எகிப்துடனான காஸாவின் இந்த எல்லையை கைப்பற்றுவதன் மூலம் ஹமாஸுக்கு ஆயுதங்கள் வழங்குவதை தடுக்க முடியும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இஸ்ரேலின் தாக்குதல் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post