WhatsApp Channel
ரஷ்யாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ்-கே என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் ஒரு இசை அரங்கம் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவின் மேற்கில் அமைந்துள்ளது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்த இந்த மண்டபத்தில் பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் திடீரென அரங்குக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அவர்கள் துப்பாக்கியால் சுட்டு உள்ளே திரண்டிருந்தவர்களைத் தாக்கி, தீ வைத்தனர்.
இதனால் உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். தீ விபத்தில், கச்சேரி அரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அரங்கம் முழுவதும் புகை பரவியது. இதனால், மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். ரஷ்ய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
60 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து 70க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டனர். மேற்கூரை இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
முதலில் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சில நாட்களுக்கு முன் ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார் புதின். 5வது முறையாக வெற்றி பெற்றுள்ள அவர், முழு காலத்துக்கும் அதிபராக நீடிப்பார். இதனால் உக்ரைனுக்கு எதிராக 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் தீவிரமடையலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post