WhatsApp Channel
சென்னை பள்ளிக்கரணை லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஆதிபுரீஸ்வரர் கோவில் நிலத்தை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.கவினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையின் மிகவும் வளர்ச்சியடைந்த புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒரு காலத்தில் சென்னையின் புறநகர்ப் பகுதியாக இருந்த வேளச்சேரிக்கு தனது பரந்த ஏரியின் பாதியை இழந்துவிட்டது.
ஒரு காலத்தில் சிறிய கிராமமாக இருந்த பள்ளிக்கரணை, மிகப்பெரிய நகர்ப்புறங்களில் ஒன்றாக மாறிவிட்டது. பள்ளிக்கரணை சாலைகளில் அடுக்குமாடி கட்டிடங்கள், வானளாவிய கட்டிடங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஓஎம்ஆர் சாலையை அடுத்துள்ள பள்ளிக்கரணை, போக்குவரத்து மிகுந்த பகுதி உருவாகியுள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கரணையில் லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி இக்கோயில்களுக்கு சொந்தமாக 1.80 லட்சம் சதுர அடி நிலம் உள்ளதாகவும், தரிசாக கிடக்கும் கோயில் நிலங்களை ஏலம் விடுவதன் மூலம் கோயில் நிதிக்கு வருமானம் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்து அறநிலையத்துறை முன்பணமாக ரூ.4.60 லட்சத்துடன் பொது ஏலத்தில் அறிவிப்பு வெளியிட்டது. கோயில் பகுதியில் பொது ஏலம் தொடர்பான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பாமகவினர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மறுபுறம், சென்னை மண்டல அறநிலையத்துறை உதவி கமிஷனர் நித்யா தலைமையில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் பொது ஏலம் நடத்த தயாராகி வந்தது.
இதனிடையே, பள்ளிக்கரணை கோவிலுக்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகள், இந்து அமைப்புகள், பா.ஜ.க.,வினர் மற்றும் பொதுமக்கள் பொது ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்ததால், பள்ளிக்கரணை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி ஏலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கான காரணத்தை கேட்டறிந்தார்.
அப்போது, பொதுமக்கள் தரப்பில், கோவில் மூலம் வழங்கப்படும் நிலத்தை, திருமண மண்டபம், கல்வி நிறுவனம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துகளை முன்வைத்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. உடனே கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர் தன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஏலம் ஒத்திவைக்கப்பட்டதால், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Discussion about this post