WhatsApp Channel
பழனியில் பங்குனி உத்திர திருவிழா ‘தீர்த்தக்காவடி’ என்று அழைக்கப்படுகிறது.
பழனி முருகன் கோவிலில், 3வது அறுபடை வீடுகளில், பங்குனி உத்திர திருவிழா, ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பழனியில் பங்குனி உத்திர திருவிழா ‘தீர்த்தக்காவடி’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது, கோடைக் காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் நவபாஷாணத்தால் ஆன பழனி முருகப்பெருமானை குளிர்விக்க பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு. குறிப்பாக பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருகின்றனர்.
பல்வேறு சிறப்புகள் கொண்ட பங்குனி உத்திர திருவிழா கடந்த 18ம் தேதி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து வழிபாடு செய்கின்றனர். விழாவில் நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.
இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டவாறு வடம்பிடித்து தேரை இழுத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்தனர்.
Discussion about this post