WhatsApp Channel
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகள் காலத்தால் அழியாதவை என்றும், வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம் தரும் என்றும் பாராட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சுதந்திர போராட்ட தியாகி முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி குரு பூஜை கொண்டாடப்படுகிறது.
இதன் போது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன்னை சென்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நேற்று தொடங்கியது. அக்டோபர் 28ல் ஆன்மிக விழாவும், 29ம் தேதி அரசியல் விழாவும், 30ம் தேதி குருபூஜை விழாவும் நடந்தது. முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழா இன்று அக்டோபர் 30ம் தேதி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்று பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குரு பூஜை விழா அமைதியாக முடிந்தது. குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம்.
சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்,” என்றார்.
Discussion about this post