WhatsApp Channel
கடத்தப்பட்ட 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் உடலை குப்பை கிடங்கில் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் ஆலுவா மாவட்டம் முகம் பகுதியில் வசித்து வந்த பீகார் தம்பதியின் 5 வயது மகள் கடந்த ஜூலை 28ம் தேதி காணாமல் போனார்.அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி அஸ்பக் ஆலமிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அஸ்பக் ஆலம் சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், சிறுமியின் உடலை ஆலுவா மார்க்கெட் பின்புறமுள்ள குப்பை கிடங்கில் வீசியுள்ளார். இதையடுத்து, 20 மணி நேர தேடுதலுக்கு பிறகு சிறுமியின் உடலை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், 5 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அஸ்பக் ஆலம் மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் அஸ்பக் ஆலம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட அஸ்பக் ஆலமுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. குற்றம் சாட்டப்பட்ட அஸ்பக் ஆலமுக்கு 5 ஆயுள் தண்டனைகளையும் நீதிமன்றம் வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு 7 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த 110 நாட்களுக்குள் எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post