WhatsApp Channel
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 20 ஓவர்கள், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று டர்பனில் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி டாஸ் கூட இல்லாமல் கனமழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது 20 ஓவர் போட்டி கெபெஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், சுப்மான் கில் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த திலக் வர்மா 29 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அரை சதத்தை கடந்த சூர்யகுமார் யாதவ் 56 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் 68 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய அணி 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் இன்னிங்ஸ் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போட்டி டி.எல்.எஸ். (DLS) முறை மாற்றப்பட்டு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்காக ரீஜா ஹென்ரிக்ஸ் மற்றும் மேத்யூ ஃப்ரீட்கே களமிறங்கினர். அதிக ரன்களை குவிக்க தொடங்கிய இந்த ஜோடியில் ஃப்ரீட்கே 16 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
ஹென்ட்ரிக்ஸ் அடுத்து கேப்டன் மார்க்ராம் இணைந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடியில் மார்க்ரம் 30 ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் ஹென்ரிக்ஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கிளாசன் 7 ரன்களிலும், டேவிட் மில்லர் 17 ரன்களிலும் வெளியேறினர்.
இறுதியில் பெலுக்வாயோ 10 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 14 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 13.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டி.எல்.எஸ். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
Discussion about this post