WhatsApp Channel
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதலீட்டுக்கு முந்தைய பணிகள் முடிவடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்து நாடாளுமன்ற ராஜ்யசபாவில் தி.மு.க. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட முதலீட்டுக்கு முந்தைய பணிகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
முக்கியமான பணிகளை மேற்கொள்ள தகுதியான ஏலதாரர்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்துடன் செய்து கொண்ட கடன் ஒப்பந்தத்தின்படி, 2026 அக்டோபருக்குள் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர் அளித்த பதிலில், கூடுதல் தொற்றுநோய் சிகிச்சை பிரிவுகள் மற்றும் கட்டுமானப் பரப்பு அதிகரிப்பு காரணமாக திட்ட மதிப்பீடு ரூ.1,264 கோடியில் இருந்து ரூ.1,977 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post