WhatsApp Channel
காசாவில் உள்ள அல்-ஷீபா மருத்துவமனைக்கு முன்பாக ஆம்புலன்ஸ்கள் மீதும் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர்.
ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் ரபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக காசா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“நாங்கள் முழு உலகிற்கும் சொல்ல விரும்புகிறோம். இவை மருத்துவ ஆம்புலன்ஸ்கள்” என்று காசாவின் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா கூறினார்.
மருத்துவ ஆம்புலன்ஸ்கள் தாக்கப்பட்ட இடத்தைச் சுற்றி ஏராளமான பொதுமக்கள் இருந்ததாகத் தெரிகிறது.
தங்கள் போர் விமானம் தாக்கியதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
இந்த வாகனங்களை ஹமாஸ் போர் வலயத்தில் பயன்படுத்தியதை தாங்கள் கண்டுபிடித்ததாகவும் அதனால்தான் தாங்கள் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
மேலும், ஹமாஸ் தனது படைவீரர்கள் மற்றும் ஆயுதங்களை நகர்த்துவதற்கு ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்துவதாகவும், தாக்குதலில் ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல்-ஷீபா மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
காஸாவின் பெரும்பாலான மருத்துவமனைகள் முடங்கியுள்ள நிலையில், இந்த மருத்துவமனை போதிய மருத்துவ வசதிகளை வழங்க முடியாமல் திணறி வருகிறது.
“எரிபொருள் தட்டுப்பாடு காயம் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தலாக உள்ளது” என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 9,200. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,500.
தற்காலிக போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக மறுத்தார்.
Discussion about this post