WhatsApp Channel
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு நலன் கருதி பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து வருகிறார்.
108 வைணவ தலங்களில் முக்கிய தலமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார்.
தேசிய அளவிலான காலோ இந்தியா போட்டியை சென்னையில் நேற்று மாலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே உள்ள பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளத்துக்குச் செல்ல வேண்டும்.
பின்னர் அங்கிருந்து காரில் காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடிக்கு முழு கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அதன்பின், ரெங்கநாதரை தரிசிக்கும் பிரதமர், கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்துகிறார். அப்போது அங்குள்ள மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணம் பாடுகிறார்கள். மோடி கேட்கிறார். அங்கு நடக்கும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
பின்னர் மதியம் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து காரில் புறப்பட்டு பஞ்சக்கரைக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி விமான நிலையம் வந்து, பின்னர் தனி விமானம் மூலம் மதுரை செல்கிறார். பிரதமர் மோடியின் திருச்சி வருகையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) இரண்டு நாட்களுக்கு முன் திருச்சிக்கு வந்து, பிரதமரின் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது.
பிரதமர் ஹெலிகாப்டரில் இருந்து ஸ்ரீரங்கம் வரும் பகுதியில் புதிதாக தார் சாலைகள் போடப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோயில் பகுதி வரை பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நேற்று காலை நடைபெற்றது. ஒத்திகையின் போது, சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, நீண்ட வரிசையில் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் செல்லப்பட்டன. பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி ஸ்ரீரங்கத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post