WhatsApp Channel
15 இந்தியர்கள் உட்பட 21 மாலுமிகளுடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை நேற்று (பிப்ரவரி 16) சென்னை வந்தது.
அரபிக் கடல் மற்றும் செங்கடலில் சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவதும், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்திய மாலுமிகளுடன் சோமாலியா கடற்பரப்பில் இருந்த லைபீரியாவைச் சேர்ந்த எம்.வி.லீலா நோர்போக் என்ற சரக்குக் கப்பல் ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இதையடுத்து, கடத்தப்பட்ட கப்பலை இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் உன்னிப்பாகக் கண்காணித்தது.
இந்த நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் 5 முதல் 6 ஆயுதம் ஏந்தியவர்கள் ஏறியதாக கடல்சார் வர்த்தக அமைப்பு தெரிவித்ததையடுத்து, அதில் இருந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய கடற்படையினர் ஐஎன்எஸ் சென்னையை எம்வி லீலா நோர்போக் கப்பலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, கடத்தப்பட்ட கப்பலின் மீது இந்திய கடற்படையின் ரோந்து விமானம் பறந்து, அதில் இருந்த மாலுமிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியது. மேலும், கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பின்தொடர்ந்து வந்த ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல், கடத்தப்பட்ட கப்பலில் இருந்து வெளியேறும்படி ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்கொள்ளையர்களை எச்சரித்தது.
இதையடுத்து போர்க்கப்பலில் இருந்த கடற்படை கமாண்டோக்கள் ஹெலிகாப்டர் மூலம் சரக்கு கப்பலில் குதித்து கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கப்பலில் எங்கும் கடற்கொள்ளையர்கள் சிக்கவில்லை. எனவே, இந்திய கடற்படையின் எச்சரிக்கையை தொடர்ந்து சரக்கு கப்பலில் இருந்து கடற்கொள்ளையர்கள் தப்பியோடியிருக்கலாம் என கூறப்பட்டது.
இதற்கிடையில் சிக்கித் தவித்த மாலுமிகளை கமாண்டோ படையினர் பத்திரமாக மீட்டதுடன், சரக்குக் கப்பல் மீண்டும் பயணத்தைத் தொடர ஐஎன்எஸ் போர்க்கப்பல் உதவி செய்தது. இந்நிலையில், 15 இந்தியர்கள் உள்பட 21 மாலுமிகளை மீட்கும் பணியில் இறங்கிய ஐஎன்எஸ் போர்க்கப்பல் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது.
Discussion about this post