WhatsApp Channel
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருவதால், தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சியை வளர்க்கும் வகையில் என் மண் என் மக்கள் என்ற யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையின் இறுதி நிகழ்ச்சி திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நாளை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடி நேரடியாக பங்கேற்று பேசுகிறார். இந்த யாத்திரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தை திருப்பூரில் பிரமாண்டமாக நடத்த பா.ஜ.க திட்டமிட்டு வரும் நிலையில், மடப்பூர் கிராமத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானத்தை தயார் செய்துள்ளனர். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தமிழகத்தில் பாஜக நடத்தும் மிகப்பெரிய பேரணியாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்காக நாளை கோவை சூலூர் விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். தொடர்ந்து பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, அங்கிருந்து மதுரை செல்கிறார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் மோடி, அன்று இரவு மதுரையில் தங்குகிறார். பின்னர் தமிழக பாஜக நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார்.
நாளை மறுநாள் தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு நெல்லை சென்று பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு கேரளா செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் வருகை தரும் இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக திருப்பூரில் முதலில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதால் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 6000 முதல் 10000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மோடி பாதுகாப்பாக வருவதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Discussion about this post