WhatsApp Channel
அரவிந்த் கெஜ்ரிவாலை 6 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் நடந்த மதுக்கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குனரகம் 9 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அமலாக்க இயக்குனரகத்தின் சம்மன் சட்டவிரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்துவிட்டார்.
இந்நிலையில், அமலாக்க இயக்குனரகத்தை சேர்ந்த 12 பேர் கொண்ட குழு நேற்று கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியது. இதையடுத்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை அமலாக்க இயக்குனரக தலைமையகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்க இயக்குனரகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அரவிந்த் கெஜ்ரிவாலை 6 நாட்கள் (28ம் தேதி வரை) அமலாக்க இயக்குனரக காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
Discussion about this post