100 கோடி நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து கரூர்-மேலகரூர் சப்-ரிஜிஸ்டிரார் முகமது அப்துல் காதர் கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு குறித்து புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்பட மொத்தம் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் தன் பெயர் சேர்க்கப்படலாம் என்ற அச்சத்தில், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கோரி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜூன், 12ல் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை ஜூன் 25ஆம் தேதி நடந்தபோது, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், முன்ஜாமீனும் மறுக்கப்பட்டதால் திரு.விஜயபாஸ்கர் தலைமறைவானார்.
தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி தனிப்படை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Discussion about this post