WhatsApp Channel
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நெல்லை-தென்காசி மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்காள விரிகுடாவில் ஏற்படும் முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 14ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.
கிழக்கு திசை காற்றின் வேகத்தில் மாற்றம் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
Discussion about this post