WhatsApp Channel
அருணாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அருணாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில சட்டசபை தேர்தலும் நடைபெறவுள்ளது. அதன்படி, 2 லோக்சபா தொகுதிகளுக்கும், 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி, 27ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் சவுனா மெய்ன் உட்பட பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்ட 10 தொகுதிகளில் அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனையடுத்து அவர்கள் 10 பேரும் போட்டியின்றி எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதனை மாநில தேர்தல் அதிகாரி பவன்குமார் அறிவித்தார்.
இந்த 10 தொகுதிகளைத் தவிர, மீதமுள்ள 50 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றார்.
இதேபோல், வேட்புமனு வாபஸ் பெற்ற பிறகு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக பவன் குமார் தெரிவித்தார்.
Discussion about this post