WhatsApp Channel
லியோவின் வெற்றி விழா நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
லலித் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி திரைக்கு வந்தது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சகர்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து, சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக இது அமைந்தது. மேலும் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 12 நாட்களில் ரூ.540 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நவம்பர் 1ம் தேதி (நாளை) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. விழாவுக்கு பாதுகாப்பு கோரி தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தார். இந்த விழாவில் விஜய்யும் கலந்து கொள்ள இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் ‘லியோ’ வெற்றி விழாவுக்கு போலீசார் அனுமதி அளித்தனர்.
விழாவுக்கு வரும் ரசிகர்கள் அனுமதிச்சீட்டு இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர்கள், நகராட்சி, நகர, மாவட்ட, வார்டு நிர்வாகிகள் 6,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரங்கிற்கு வரும்போது உறுப்பினர் அட்டையை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், சரிபார்த்த பின்னரே அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லியோவின் வெற்றி விழாவில் உறுப்பினர் அல்லாத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Discussion about this post